Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாளை கூடுகிறது அதிமுக பொதுக்குழு - கூட்டணி குறித்து முக்கிய முடிவு

ஜனவரி 08, 2021 11:23

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நாளை காலை 8.50 மணிக்கு கூடுகிறது. இதையொட்டி அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தேர்தல் கமி‌ஷனுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்.


அந்த வகையில் அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் இருந்தது. செயற்குழு கூட்டம் மட்டும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் அ.தி.மு.க.வில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த குழுவுக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த விதிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட வேண்டும். தற்போது கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க. பொதுக்குழுவை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கூட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 302 பேர் பங்கேற்கிறார்கள். பொதுக்குழுவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அணிகளின் செயலாளர்கள், ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட மொத்தம் 3,500 பேர் கலந்து கொள்கிறார்கள்.

தமிழக சட்ட சபைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் நாளை நடைபெறும் பொதுக்குழு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மேலும் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட எந்தெந்த கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறச் செய்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கூட்டணியில் இடம் பெறும் கட்சி அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிகிறது. சட்டசபை தேர்தலில் கூட்டணியை இறுதி செய்யவும் அனைத்து முடிவுகளை எடுப்பதற்கும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.வுக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டுள்ளதால் அதற்காக உருவாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது. பொதுக்குழு கூடியதும் முதலில் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளன. அதன்பிறகு அ.தி.மு.க.வின் 2-ம் கட்ட தலைவர்கள் கூட்டத்தில் பேசுவார்கள். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் காரசாரமாக பேசுவார்கள் என தெரிகிறது.

சசிகலா வருகிற 27-ந் தேதி சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வர உள்ளதால் அவரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பதா? வேண்டாமா? என்பது பற்றியும் இந்த பொதுக்குழுவில் காரசாரமாக பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  பா.ஜ.க வுடன் தொகுதி பங்கீட்டில் எவ்வித சமரசமும் இன்றி அ.தி.மு.க. கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இவர்கள் பேசுவார்கள் என கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மிகவும் பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுவதையொட்டி நிகழ்ச்சி ஏற்பாடுகளும் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. கூட்டத்தில் பங்கேற்க வரும் உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்து இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் செல்கிறார்கள்.அங்கு நாளை மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி குறித்து மீண்டும் விவாதிக்கிறார்கள். பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு தலைமைக் கழகத்திலும் ஆலோசனை நடைபெற உள்ளதால் நாளைய தினமே கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்